Tuesday 27 August 2013

4. ஞான யோகம்



ஞான யோகம்



புலன்களை அடக்கிப் பரம்பொருளை நினைப்பதே ஞான யோகம். கண்ணனின் அவதாரம் பெருமை மிக்கது. கர்ம யோகத்தில் ஞான பாகமும் அடங்கியுள்ளது. அதனால் ஞான யோகத்தின் பலன்களை, கர்ம யோகமும் கொடுக்க வல்லது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

--------------
கண்ணன்பகைவர்க்குப் பயங்கரனே!     அழிவற்ற இந்தக் கர்ம யோகத்தை முதலில் நான் சூரியனுக்குச் சொன்னேன். சூரியன் மனுவுக்கு மொழிந்தான். அவன் இச்வாகு மன்னனுக்கு உரைத்தான். இவ்விதம் வழிவழியாய் வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்தார்கள். பிறகு நாளடைவில் அது மறைந்து போய்விட்டது. நீ எனது பக்தன், நண்பன் என்ற காரணத்தால், இந்தப்  பழமையான யோகத்தை இன்று உனக்கு எடுத்துச் சொன்னேன்! இது சிறந்த இரகசியம்.       

அர்ஜுனன்:            கண்ணா! மணிவண்ணா! சூரியனுடைய பிறப்பு முந்தியது. உனது பிறப்போ பிந்தியது. அப்படியிருக்க, முதலில் நீ சூரியனுக்கு உபதேசித்தவன் என்பதை எப்படி நான் நம்புவேன்?

கண்ணன்: அர்ஜுனா! எனக்கு எத்தனையோ பிறவிகள் கழிந்துவிட்டன. உனக்கும் அப்படித்தான். அவற்றை எல்லாம் நான் அறிவேன். ஆனால் நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்! எல்லா உயிர்க்கும் உள்ளானவன். இருந்தாலும் என் மாயா சத்தியால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு, புதிய புதிய பிறவிகளில் அவதரிக்கிறேன். தர்மத்தைச் சூது கவ்வும் போதெல்லாம் என் பிறப்பெனும் சம்பவத்தை நிகழ்த்துகிறேன். நல்லதைக் காக்கவும், தீயதைப் போக்கவும், அறத்தை நிலை நாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன். எனவே என் பிறப்பு தெய்வீகமானது! செயலும் தெய்வீகமானது. இதை உணர்ந்தவன் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை. அவன் என்னுடன் சங்கமித்து விடுகிறான். மேலும் ஆசை, அச்சம், கோபம் ஆகியவை நீங்கிட என்னிடம் சரணடைந்து, ஞானதபசால் பரிசுத்தமாகி, என்னையே பலர் அடைந்திருக்கின்றனர். என்னை வழிபடுகிறவர்களுக்கு அவரவர் நினைத்தபடியே அருள் புரிகின்றேன். எனவே எங்குமுள்ள மனிதர்கள் என் வழியையே பின்பற்றி நடக்கிறார்கள்.    

செய்யும் தொழிலில் வெற்றியை விரும்பும் மனிதர்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். ஏனெனில் இந்த உலகில் தொழில் செய்தால் விரைவில் பலன் கிடைக்கிறது. இந்தத் தொழிலை மக்களின் குணநலன்களுக்குத் தக்கபடி நான்காய்ப் பிரித்து, நான்கு வர்ணங்களையும் (பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன்) நான் தான் படைத்தேன். ஆனால் அதன் படைப்புக்குப் பொறுப்பாளி நானல்ல என்பதை நீ அறிந்து கொள்! ஏனெனில் எந்தச் செயலும் என்னைத் தீண்டுவதில்லை. அதன் பலனும் எனக்கு வேண்டுவதில்லை. இந்த உண்மையை அறிந்தவன் உலக பந்தங்களில் கட்டுப்படுவதில்லை! மோட்சத்தை விரும்பிய முன்னோர்கள் இதை அறிந்து தான் செயல்பட்டார்கள். அவர்களின் அடிச்சுவட்டை நீயும் பின்பற்று!

கர்ம மார்கம் எது, அது அல்லாத மார்கம் எது என்பதில் ஞானிகளும் தடுமாறுகின்றனர்.  கர்ம         மார்கம் மிகவும் மர்மமானதுபுரிந்து கொள்ளக் கடினமானது. ஆகவே அதைப்பற்றி உனக்குக் கூறுவேன்! செய்ய வேண்டிய தொழில், விலக்க வேண்டிய தொழில், தொழிலின் இயல்பு நிலை, தொழிலைக் கடந்த நிலை ஆகிய அனைத்தையுமே நீ அறிந்து கொள்ள வேண்டும்! இதை அறிந்து கொண்டால் தீமைகளிலிருந்து நீ விடுபடுவாய்!

இயக்கத்தில் இயக்கமின்மை ஒளிந்திருக்கிறது. இயக்கமின்மையில் இயக்கம் மறைந்திருக்கிறது. இதனை அறிந்தவனே பேரறிஞன். ஆசையின் நிழல் படியாது, ஞானத்தீயால் புடமிடப்பட்ட செயலுக்குரிய அவனே அறிஞருள் அறிஞனாவான்! எதிலும் அவனுக்கு ஆசை உண்டாகாது! அவன் ஒரு செயலைச் செய்தாலும் கூட, அதைச் செய்தவனாய் ஆகமாட்டான். அவன் செய்வது எல்லாமே தவம் செய்வது போலவே இருக்கும்! அவன் அறிவால் ஆசையை அடக்கியவன்! ஆத்ம சத்தியால் உடலையும் உள்ளத்தையும் மடக்கியவன்! சொத்து சுகங்களைத் துறந்தவன்! இன்ப துன்பம் முதலிய இரட்டைகளை மறந்தவன்! கிடைத்ததைக் கொண்டே மகிழ்பவன்! பொல்லாத பொறாமையை இகழ்பவன்! அன்றாட சரீரத் தேவைக்காக மட்டுமே தொழிலைச் செய்பவன்! காரியம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் சமமாய் நினைப்பவன்! தானாய் இலாபம் வந்தாலும் அமைதியாய் இருப்பவன்! அறிவிலே மனத்தை ஆழ்த்தி, ஆசையை வெட்டி வீழ்த்தி, செய்யும் தொழிலை வேள்வியைப் போலவே செய்யக்கூடிய அவனுக்கு, முன் வினையெல்லாம் முற்றிலும் அற்றுப் போகும்.     

இனி இந்தக் கர்மத்தால் நிகழும் யாகத்தைப் பற்றி விளக்குவேன்! யாகத்தில் செய்யும் அர்ப்பணச் செயலும் பிரம்மமே! அர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகமும் பிரம்மமே! அதனை ஏற்கும் அக்கினியும் பிரம்மமே! பிரம்மமாகிய தலைவனால் செய்யப்படும் ஹோமமும் பிரம்மமே! ‘எல்லாம் பிரம்மமேஎன்று நினைப்பவன் முடிவில் சேர வேண்டிய இடமும் பிரம்மமே.  

சில யோகிகள் தேவதைகளுக்காக யாகம் செய்கிறார்கள். மற்றும் சிலர் இயற்கைத் தீயில் ஆத்மாவையே ஆகுதி செய்கிறார்கள். இன்னும் சிலர் செவி முதலிய புலன்களை அடக்கம் என்ற அக்கினியில் ஆகுதி செய்கிறார்கள். மேலும் சிலர் புலன்களாகிய நெருப்பில் ஆரவாரத்தைப் போட்டு எரிக்கிறார்கள். வேறு சில முற்றிய ஞானிகள் புலன்களின் சேட்டைகளையும் உயிரின்  ஆட்டப்பாட்டங்களையும் மனக்கட்டுப்பாடு என்ற யோக நெருப்பில் போட்டு எரிக்கிறார்கள்.    

சிலர் பொருள்களை அளிப்பதையே யாகமாய்ச் செய்கிறார்கள். சிலர் தவத்தால் யாகம் செய்கிறார்கள். சிலர் யோகத்தால் யாகம் செய்கிறார்கள். சிலர் கல்வியாலும் ஞானத்தாலும் யாகம் செய்கிறார்கள்! இன்னும் சிலர் உண்ணும் உணவை ஒழுங்குபடுத்திக் கொண்டு, பிராணாயாமத்தின் மூலம் பிராண வாயுவில் அபான வாயுவையும், அபான வாயுவில் பிராண வாயுவையும் ஆகுதி செய்கிறார்கள்! இன்னும் சிலர் இவ்விரண்டின் போக்கையும் கட்டுப்படுத்திக் கொண்டு, உயிரையே உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவர்கள் அனைவருமே யாகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்! அதில் மிஞ்சிய உணவான அமிர்தத்தை உண்டவர்கள்! அதனால் புண்ணியம் கொண்டவர்கள். யாகம் செய்யாதவர்களுக்கு இவ்வுலகத்திலும் சுகம் இல்லை! அவ்வுலகத்திலும் சுகம் இல்லை. இவ்விதம் பலவிதமான யாகங்கள் வேதத்தின் முன்பகுதிகளில் கூறப்பட்டுள்ளன. கர்மம் என்பது இல்லை என்றால் எந்த யாகமும் இல்லை! இதை உணர்ந்துவிட்டால் உன்னை அலைக்கழிக்கும் மயக்கத்திலிருந்து விடுதலை பெறுவாய்!

பாண்டவனே! பொருள்களைக் கொண்டு செய்யும் யாகத்தைக் காட்டிலும், ஞான யாகமே சிறந்தது. ஏனெனில் எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் தான் முடிவடைகின்றன. இந்த ஞானத்தை உயர்ந்த தத்துவஞானிகள் உனக்கு உபதேசிப்பார்கள். அவர்களின் திருவடிகளைத் தொழுதும், தொண்டுகள் புரிந்தும், அடிக்கடி கேள்விகள் கேட்டும், இந்த ஆத்ம ஞானத்தைக் கற்றுக் கொள்! இந்த ஞானத்தை நீ பெற்று விட்டால், அனைத்துமே உனக்குள் அடங்கியிருப்பதை உணர்ந்து கொள்வாய்! அவை எனக்குள் இருப்பதையும் கண்டு கொள்வாய்!

நீ நீந்தும் பாவக்கடல் என்ன தான் பெரியதாய் இருந்தாலும் ஞானத்தோணி உன்னை நிச்சயம் கரையில் சேர்த்துவிடும். கொழுந்து விடும் நெருப்பு, விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடுவது போல், ஞானக்கனல் உன் வினைகளை எல்லாம் எரித்துத் தள்ளிவிடும். உன்னைப் பரிசுத்தப்படுத்த உலகில் ஞானத்தை விடச் சிறந்தது ஒன்றுமில்லை. தகுந்த காலம் வரும்போது, யோகசித்தன் அதைத் தானே தனக்குள் அடையாளம் கண்டு கொள்கிறான். ஞான சம்பாத்தியத்தில் நாட்டமுள்ளவன், புலன்களை அடக்கும் ஆற்றலுள்ளவன் ஞானத்தை அடைகிறான்! அமைதி மயமான மோட்சத்தை அடைகிறான். ஆனால் அறிவில்லாதவனும் அக்கறை இல்லாதவனும், சந்தேகப்பட்டவனும் அழிந்து போகிறான்! சந்தேகப் பிராணிகளுக்கு மண்ணுலகிலும் சுகம் இல்லை! விண்ணுலகிலும் சுகம் இல்லை.

தனஞ்ஜயனே! யோகத்தால் செயல்களை விலக்கி, ஞானத்தால் சந்தேகத்தைத் துலக்கி, ஆத்மாவை விருப்பம் போல் பழக்கியவனை முன்வினைகள் கட்டுப்படுத்துவதில்லை. ஆகவே அஞ்ஞானத்தில் பிறந்திருக்கும் உன் ஐயத்தை ஞான வாளால் துண்டித்துவிடு! எழுந்து நின்று எதிரிகளைத் தண்டித்துவிடு!


(நான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment